Saturday 26 October 2013


ஆடு வளர்ப்பு:


''ஆண்டுக்கு ஒரு தடவை பொலிக் கிடாவை மாத்தணும்!''
தகவல்: பசுமை விகடன் 

பொட்டனேரியில் உள்ள, 'மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலைய'த்தின் உதவிப் பேராசிரியர் ந. பாரதி, வெள்ளாட்டு இனங்கள் மற்றும் இனவிருத்தி முறைகளைப் பற்றி விளக்கும்போது, ''வெள்ளாடுகளை, 'ஏழைகளோட பசு’னுதான் சொல்லணும். சிறு-குறு விவசாயிக, நிலமில்லாத விவசாயிங்களுக்குப் பொருளாதார ரீதியா கை கொடுக்குறது வெள்ளாடுகதான். குணத்தை வெச்சும், வெளித் தோற்றத்தை வெச்சும் அந்தந்தப் பகுதிகள்ல சுலபமா அடையாளம் கண்டுபிடிக்கக் கூடிய வகைகளைத்தான் இனம்னு சொல்றோம். ஒவ்வொரு பகுதிகள்லயும் இருக்கற ஆடுகளுக்கு... ஓரொரு இனப்பெயர் இருக்கும். தமிழ்நாட்டுல இருக்கற இனங்களைப் பத்திப் பார்ப்போம்.

சிப்பாய் நடை போடும் கன்னி!

கன்னி ரக ஆடு... கரிசல் மண், குன்றுகள் அதிகமா இருக்கற பகுதிகள்ல இருக்கும். நல்லா உயரமா இருக்கும். கிடா ஆடு 50 கிலோவும், பெட்டை ஆடு 30 கிலோவும் எடை இருக்கும். ரெண்டுக்குமே கொம்பு இருக்கும். உடம்பு கருப்பு நிறத்துலயும், தலையில முன்பக்கமா ரெண்டு வெள்ளைக் கோடுகளும் இருக்கும். காதுகள்லயும் ரெண்டு வெள்ளைக் கோடுகள் நல்லா தெரியும். வயித்தோட அடிப்பகுதி, கால் குளம்பின் மேல்பகுதி வெள்ளையா இருக்கும். இந்த இன ஆடுகள் மந்தையா நடந்து போறப்ப, கால் அசைவுகளைப் பாத்தா... பட்டாளத்து சிப்பாய்ங்க வரிசையா போற மாதிரி இருக்கும். இந்த இனத்தை 'பால் கன்னி’னு சொல்வாங்க. வெள்ளை நிறத்துக்குப் பதிலா... செந்நிறம் அதிகமா இருந்தா 'செங்கன்னி’னு சொல்லுவாங்க. கன்னி ஆடுகள் ஒரு ஈத்துல ரெண்டு குட்டியிலிருந்து நாலு குட்டிகள் வரை ஈனும்.

இந்த ஆடுக தமிழ்நாட்டோட தென்பகுதிகள்ல... குறிப்பா, விருதுநகர் மாவட்டத்துல சாத்தூர், சிவகாசி தாலூகா, தூத்துக்குடி மாவட்டத்துல கோவில்பட்டி, விளாத்திகுளம் தாலூகா பகுதிகள்ல அதிகமா இருக்கும். கோவில்பட்டியில ஒவ்வொரு திங்கட்கிழமையும் வாரச் சந்தை கூடும். கன்னி ஆடுகளை வாங்க நினைக்குறவங்க இங்க வாங்கிக்கலாம்.

கடலோரத்துக்கு ஏத்த கொடி!

இதை 'போரை ஆடு’னும் சொல்வாங்க. நல்ல உயரம், நீண்ட கழுத்து, உயரமான கால், ஒல்லியான உடம்பு இதுதான் கொடி ஆட்டோட அடையாளம். இந்த ரகத்துல பெட்டைக்கும் கொம்பு இருக்கும். இந்த ஆடுகள் ரெண்டு நிறத்துல இருக்கும். வெள்ளை நிறத்துல கருப்பு மையை அள்ளி தெளிச்சது போல இருக்குற ஆடுகளை, 'கரும்போரை’ அல்லது 'புல்லைபோரை’னும்... வெள்ளை நிறத்துல செந்நிறம் கலந்து இருந்தா 'செம்போரை’னும் சொல்வாங்க. 100 செ.மீ உயரம் வரை இருக்கும். எடையைப் பொறுத்தவரைக்கும் கிடா 47 கிலோவிலிருந்து 70 கிலோ வரையும் இருக்கும். பெட்டை 32 கிலோ வரை இருக்கும். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பகுதிகள்லயும் அதையட்டிய ராமநாதபுரம் பகுதியிலயும் பரவலா இருக்கற இந்த இனம், கடலோர மாவட்டங்களுக்கு ஏத்த இனம்!

சேலம் கருப்பு!

இதை, 'வரை ஆடு’னும் சொல்லுவாங்க. சேலம் மாவட்டத்துல ஓமலூர், மேச்சேரி பகுதிகள்ல அதிகமா வளர்க்கறாங்க (மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், 'வரை ஆடு’ எனும் பெயரில் வேறு ஒரு இனமும் உண்டு- ழிவீறீணீரீவீக்ஷீவீ ஜிணீலீக்ஷீ). இந்த ஆடு உடம்பு முழுக்க கருப்பு நிறத்துல இருக்கும். கொம்புகள் பின்பக்கமா நல்லா வளைஞ்சு இருக்கும். இது ஈத்துக்கு ஒரு குட்டி மட்டும்தான் ஈனும்.

பள்ளை ஆடு!

இந்த ஆடுகள், குட்டையா இருக்கும். 'குள்ள ஆடு’, 'சீனி ஆடு’னும் சொல்வாங்க. சின்னக்கொம்பும், மூழிக்காதும் இதோட அடையாளம். குட்டிகள் பிறக்கும்போது கால் குட்டையாவும் உடம்பு அகலமாவும் இருக்கும். இந்த இனம் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பரவலா இருக்கு.

மோளை ஆடு!

நடுத்தர உயரத்துல, நல்ல சதைப் பிடிப்போட, சுத்தமான வெள்ளை நிறத்துல இந்த ஆடுகள் இருக்கும். ஈத்துக்கு ரெண்டு முதல் நாலு குட்டிகள் வரை ஈனும். 30 கிலோ முதல்
36 கிலோ வரை எடை இருக்கும். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் பகுதியில இந்த வகை ஆடுகள் அதிகளவு இருக்கு.

இப்ப சொன்ன இந்த அஞ்சு ரகமும்... தமிழ்நாட்டைச் சேர்ந்த இனங்கள்தான். இது இல்லாம... ஜமுனாபாரி, தலைச்சேரி மாதிரியான வெளி மாநில இனங்களையும் வளர்க்கலாம். எந்த இனங்களையும் சேராத ஆடுகளும் இருக்கு. அதை பொதுவா 'நாட்டு ஆடு’னு சொல்வாங்க.

இனவிருத்தி இப்படித்தான்!

வெள்ளாடுகளைப் பொறுத்தவரை பெட்டை 6 மாசத்திலும், கிடா 8 மாசத்திலும் பருவத்துக்கு வரும். ஆனா, பெட்டையை 10 மாசத்துல இருந்து 15 மாசத்துக்குப் பிறகும், கிடாவை 18 மாசத்துக்குப் பிறகும்தான் இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்தணும்.
19 நாள் முதல் 21 நாள் வரைக்கும் ஆடுகளோட சினைப் பருவம் இருக்கும். அடிக்கடி கத்தும், வாலை வேகமா அசைக்கும், சரியா தீவனம் எடுக்காது, மத்த ஆடுக மேல தாவும். இந்த மாதிரியான அறிகுறிகள் தெரிஞ்சா... ஆடுகள் சினைக்குத் தயாராயிடுச்சுனு அர்த்தம். அறிகுறி தெரிஞ்ச 24 மணி நேரத்துக்குள்ள பொலிக் கிடாயுடன் சேர்த்துடணும். சினை பிடிச்ச பிறகு, குட்டி போடுற வரைக்குமான சினைக்காலம் 146 முதல் 151 நாட்கள். குட்டி போட்ட பிறகு, மூணு மாசம் வரைக்கும் பாலூட்டும். அதுக்குப் பிறகுதான் அடுத்த சினைக்கு விடணும்.

கிடா தேர்வில் கவனம்!

கிடாக்களைப் பொறுத்தவரைக்கும் நல்ல தரமான 'பொலிச்சல்’ உள்ள கிடாயா இருந்தாத்தான், நல்லத் தரமானக் குட்டிகள் கிடைக்கும். ஒரு பொலிக் கிடாவை 'மந்தையில பாதி’னு சொல்லலாம். நல்ல பாரம்பரியமான, பால் அதிகமா கொடுக்குற தாய் ஆட்டோட குட்டிகள்ல, நல்ல உடல் வளர்ச்சியுள்ள 6 வயசுள்ள கிடா குட்டிகளைத்தான் பொலிக் கிடாயா தேர்வு செய்யணும். அதிக குட்டி போடுற தாயோட குட்டிகளை பொலிக் கிடாயா தேர்ந்தெடுத்தா... இன்னும் சிறப்பா இருக்கும்.

சிலர், மந்தையில இருக்கற எல்லா ஆடுகளுக்கும் ஒரே கிடாவைப் பயன்படுத்துவாங்க. அப்படி செஞ்சா, இனப்பெருக்கம் சரியா இருக்காது. 20 முதல் 30 ஆட்டுக்கு ஒரு கிடாங்கிற கணக்குல தான் பொலிக் கிடாவைப் பயன்படுத்தனும். பொலிக் கிடாவை வருஷத்துக்கு ஒரு தரம் மாத்திடணும். அடுத்தக் கிடாவை வெளிய இருந்துதான் கொண்டு வரணும். பெரிய மந்தைகள வெச்சுருக்கற விவசாயிகள், தங்களுக்குள்ள கிடாக்களை மாத்திக்கலாம்.

ஆடுகளைக் கழிக்க வேண்டும்!

ஒவ்வொரு வருஷமும்... 10% முதல் 20% வரைக்கும் மந்தையில தேவையில்லாத ஆடுகளைக் கழிச்சிடணும். பிறக்கற குட்டிக, இந்தக் கழிவு ஆடுகளோட எண்ணிக்கையை ஈடுகட்டும். அதனால் மொத்த எண்ணிக்கை பாதிக்காது. சரி, எந்தெந்த ஆடுகள கழிக்கணும்?ங்கற கேள்வி உங்களுக்கு நிச்சயம் வரும். அதாவது, குட்டிகளோட எடை வழக்கத்தைவிட கம்மியா இருந்தா... அந்த குட்டிகளோட தாய் ஆட்டை கழிச்சுடணும். சினை நிக்காத ஆடுகள், இனவிருத்திக்கான தகுதி இல்லாதவை, குணப்படுத்த முடியாத காயம், ஊனம் இருக்கற ஆடுகள், பல் இல்லாதவை, மரபியல் சார்ந்த நோய் இருக்கற ஆடுகள்னு லாபம் கொடுக்க முடியாத ஆடுகளை அப்பப்போ கழிச்சுடணும்'' என்று விளக்கமாக பேசினார் பாரதி.

தொடர்புக்கு,
மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலையம்,
தொலைபேசி: 04298-262023


0 comments :

Post a Comment