Friday 25 October 2013

ஜெர்ஸிப் பசு: 


ஜெர்சிப் பசுவின் பூர்வீகம் இங்கிலாந்தின் ஜெர்சி தீவு. இது கருமையாகவோ அல்லது வெண்மையாகவோ இருக்கும். உடல் முழுதும் ஒரே நிறத்தைப் பெற்றிருந்தாலும் சில மாடுகளில் வெண்மைப் புள்ளிகளும் காணப்படும். நடுத்தர உடலும் சிறிய முன்னோக்கி வளர்ந்த கொம்புகளுடனும் காணப்படும். ஒரு கறவை காலத்தில் சுமார் 1735 முதல் 2237 கிலோ பால் வரை கொடுக்கும். தமிழகத்தின் தட்ப வெட்பத்தில் சிறப்பாக வளரக்கூடியது.

(தமிழக விவசாயி உலகம்)

சிந்திப்பசு:

சிந்தியின் தாயகம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி மற்றும் ஐதராபாத் மாவட்டங்கள். நடுத்தரமான உடலும் குட்டையான கொம்புகளும் கொண்டிருக்கும். இதன் நிறம் சிவப்பாக இருப்பதால் இது சிவப்பு சிந்தி என்றும் அழைக்கப்படும். ஒரு கறவைக் காலத்தில் 1250 முதல் 1800 கிலோ வரை பாலைத் தரும். எல்லா தட்ப வெப்ப நிலைகளிலும் சீராக வளரும் என்பதால் நமது நாட்டில் எல்லா இடங்களிலும் வளர்க்கப்படுகிறது

(தமிழக விவசாயி உலகம்)

மாட்டுக்கொட்டகை இப்படியும் போடலாம் :

மாட்டுக்கொட்டகை சற்று உயரமான இடத்தில் அமைக்கனும். சுவரின் உயரம் ஐந்தடி இருந்தால் நல்லது. கூரையின் உயரம் 10 முதல் 12 அடி இருக்கலாம். நல்ல காற்றோட்டம் இருக்கனும். தரை சொரசொரப்பா இருக்கறது முக்கியம். ஒரு மீட்டருக்கு 3 செ.மீ. வாய்வா இருக்கனும். பெரிய மாடுகளுக்கு 40 ச.அடியும் கிடேரிக்கன்றுகளுக்கு 30 ச.அடியும் சிறிய கன்றுகளுக்கு 20 சதுர அடியும் தேவை.

(தமிழக விவசாயி உலகம்)

பசுமாடும் பஞ்சகவ்யாவும் :

ஒரு வேளைக்கு 20 மில்லி வீதம் பஞ்சகவ்யாவைக் காலையிலும் மாலையிலும் கறவை மாட்டுக்குத் தீவனத்தில் கலந்து கொடுக்கலாம். இதனால் பாலின் அளவு அதிகரிக்கிறது. மடிவீக்க நோய் வருவது தவிர்க்கப் படுகிறது. தண்ணீருடன் பஞ்சகவ்யாவைக் கலந்து கன்றுகளுக்க் கொடுக்க உடல் வாளிப்புடனும் நல்ல வளர்ச்சியுடனனும் கன்றுகள் விளங்கும். கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றலைப் பஞ்சகவ்யா பெற்றுத் தருகிறது


கறிக்கோழிக் கவனிங்க :

கறிக்கோழிகளை வாரந்தோறும் எடை போட வேண்டும். நாம் எதிர்பார்க்கும் எடையைக் கோழிகள் அடையாமல் இருந்தால் அதற்குரிய காரணத்தைக் கண்டு பிடிக்கவேண்டும். கோழிகளில் இறப்பு அளவு 2 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்தால் தீவனத்துடன் ஆண்ட்டிபயாடிக் மருந்துகளைக் கலந்து கொடுக்கலாம். இறப்பு அளவும் குறைவாக இருந்து தீவனத்தை இறைச்சியை மாற்றும் திறனும் கோழிகளிடம் குறைவாக இருந்தால் தீவனத்தின் தரத்தைச் சோதியுங்கள்.
இயற்கை முறை பால் பண்ணை :
தற்காலத்தில் சுத்தமான பசும்பால் வேண்டும் என்றால் நிச்சயம் நகரங்களில் கிடைக்காது. கிராமங்களில் இன்றும் நம் கண்முன்னே பசு மாட்டில் பால் கறந்து வாங்கலாம். அந்தப் பாலைத் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டாலே, உடம்பில் தெம்பும், பலமும் தெரியவரும். பால் வளத்தில் இந்தியா உலக அளவில் ஏழாவது இடத்திலிருந்து முதலாவது இடத்திற்கு முன்னேறிவிட்டது. ஆனாலும் நல்ல சுத்தமான, கலப்படமில்லாத பால் கிடைப்பது என்பது அரிதாகிவிட்டது.
 தஞ்சாவூர் பகுதிகளில் பனங்கற்கண்டு பால் மிகவும் பிரபலம். மும்பை உள்ளிட்ட வடமாநிலப் பகுதிகளில் தூத்வாலா என பாலுக்கு என தனியே கடை உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை தனியே பாலுக்கு என கடைகள் இல்லை. இந்த நிலையில், கிராமங்களில் கிடைக்கும் சுத்தமான பசும்பால் போலவே, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஜி.மா. பால்பண்ணையில் சுத்தமான, பசும்பால் கிடைக்கிறது. சிவகாசி அருகே பள்ளபட்டி கிராமத்தில் சுமார் 2.25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த பால் பண்ணையில் சுமார் 60 பசுமாடுகள் உள்ளன. இந்தப் பண்ணையை அமைத்துள்ளவர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜி.மதுரா தாஸ்சர்மா என்பவர்.. இவரது பால்பண்ணை குறித்து அவரிடம் கேட்டபோது:

 உங்களது பால் பண்ணையின் சிறப்பு என்ன?

 
 நாங்கள் மாடுகளுக்கு சோள மாவு 60 சதம், மீதமுள்ள 40 சதம் மினரல், கால்சியம், உப்பு உள்ளிட்ட சத்துகள் அடங்கிய இயற்கை சத்து மாவை, மாடுகளுக்கு உணவு தயாரிக்கும் நிறுவனங்களில் இருந்து வாங்குகிறோம். சமையல் கழிவுநீர் உள்ளிட்டவற்றை மாடுகளுக்குக் கொடுப்பதில்லை. சுத்தமான கிணற்று நீரை மட்டுமே கொடுக்கிறோம். மாடுகளுக்கு கொடுக்கும் தீவனத்தைப் பொருத்துத்தான் பாலின் தரமும் இருக்கும்.
 எனவே எங்கள் பண்ணைப் பாலை 24 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காவிட்டாலும், கெட்டுப் போகாது. இதுவே எங்கள் பண்ணைப் பாலின் சிறப்பாகும்.


 இந்தப் பண்ணை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

 
 வீட்டில் பால் வழங்கும் நபரிடம் நல்ல பாலாகக் கொடுங்கள் என பலமுறை கூறினேன். அதற்கு அவர், ""நாங்கள் நல்ல பாலாகத்தான் தருகிறோம். நீங்களும் மாடு வாங்கி வளர்த்து பால் கறந்தால்தான் அதில் உள்ள சிரமங்கள் புரியும்'' என்றார். அந்த வார்த்தை என்னை உசுப்பிவிட்டது. பால் பண்ணை அமைத்தே தீருவது என ஆர்வத்துடன், முதலில் ஒரு ஜெர்ஸி இன மாடும், 3 ஹெச்.எப். இன மாடும் என நான்கு மாடுகள் ரூ. 1.60 லட்சம் செலவில் வாங்கினேன். தற்போது இப் பண்ணையில் சுமார் 60 மாடுகள் உள்ளன. இதில் 45 மாடுகள் பால் கொடுக்கின்றன.


 மாடுகளை எப்படி பராமரிக்கிறீர்கள்?


 தினசரி அதிகாலை சுமார் ஒரு மணிக்கு பால் கறக்கத் தொடங்குவோம். முடிந்ததும், உடனே மாட்டைக் குளிப்பாட்டி, காய்ந்த நாற்று உள்ளிட்டவற்றை உணவாகக் கொடுத்து, தண்ணீர் வைப்போம். பிற்பகலில் சுமார் ஒரு மணிக்கு பால் கறக்கத் தொடங்குவோம். இதையடுத்தும் மாடுகளுக்கு உணவு கொடுபோம். நோய் பாதுகாப்பு முக்கியமாகும். ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கால் காணை, வாய் காணை நோய் வரக்கூடும். எனவே, முன்னதாக தடுப்பூசி போட்டு விடுவோம். மாட்டுச் சாணம் மற்றும் நீரில் வித்தியாசம் தெரிந்தால், உடனே மாட்டு மருத்துவரை அழைத்துக் காண்பிப்போம். மஞ்சள் காமாலை, காய்ச்சல் ஏற்பட்டால் மாடுகள் உணவு எடுத்துக் கொள்ளாது. இதற்கும் மருத்துவரை அணுகி, அவரது அறிவுரைப்படி நடப்போம்.
 நம் வீட்டில் பிள்ளைகளைப் பாதுகாப்பதுபோல மாடுகளையும் பாதுகாக்க வேண்டும். பருத்திக்கொட்டை, நயம் தவிடு உள்ளிட்டவற்றை மாடுகளுக்குக் கொடுப்போம். மாடு என்று அலட்சியமாக இல்லாமல் 24 மணி நேரமும் கண்காணிப்பு இருக்க வேண்டும்.
 பால் விற்பனை எப்படி?
 வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்கிறோம். மீதம் உள்ள பாலை கூட்டுறவு பால் பண்ணைக்கு கொடுத்துவிடுவோம்.


 பால்பண்ணை வைக்க பயிற்சி அவசியமா?

 
 பத்துக்கும் மேல் மாடுகள் இருந்தால் கண்டிப்பாக பயிற்சி அவசியமாகும். விருதுநகர் மாவட்ட தொழில் மையம் சார்பில் நடைபெற்ற பயிற்சி முகாமில் நான் பயிற்சி பெற்றேன். மேலும், மாட்டுத் தீவனம் தயாரிக்கும் ஒரு நிறுவனம் அளித்த பயிற்சி முகாமிலும் பயிற்சி பெற்றேன். கிராமங்களில் பலரை சந்தித்து அவர்களிடம் ஆலோசனை பெற்று வருகிறேன்.
 இந்தப் பண்ணை குறித்து வேறு எதாவது கூற விரும்புகிறீர்களா?
 நாங்கள் இயற்கை முறையில் மாடுகளுக்கு கருவூட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், இரு காளை மாடுகளை வளர்த்து வருகிறோம். மல்லாங்கிணறு, வெள்ளையாபுரம், எம்.புதுப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் அடிமாட்டு விற்பனையிலிருந்து மீட்டு 8 மாடுகள் வாங்கினேன். அவற்றை நன்கு பராமரித்து, பால்மாடாக மாற்றிவிட்டேன்.
 பால் பொருள்களான பன்னீர், நெய் உள்ளிட்டவை தயாரிக்க உள்ளேன். மேலும், எனது நண்பர் ஒருவரிடம் சுமார் 22 ஏக்கர் தரிசு நிலம் குத்தகைக்கு எடுக்க உள்ளேன். அதில் இயற்கை முறை விவசாயமும், மாடுகளுக்குத் தேவையான கோ-4 என்ற புல் ரகமும் வளர்க்கத் திட்ட
 மிட்டுள்ளேன்.