Thursday 31 October 2013


வெள்ளாடுகள் கவனிப்பும் பராமரிப்பும்:


சினை ஆடுகள் பராமரிப்பு
  1. சினை ஆடுகளை மந்தையிலிருந்து பிரித்துத் தனியே பராமரித்தல் வேண்டும்.
  2. சரிவிகித ஊட்டச்சத்துக்கள், எளிதில் செரிக்கக்கூடிய தீவனமளித்தல்.
  3. சினை ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக் கொள்ள அனுமதிக்கக்கூடாது.
  4. சினையுற்றபின் கரு கலைந்த ஆடுகளுடன் சினை ஆடுகள் எக்காரணம் கொண்டும் கலந்து விடுதல் கூடாது.
  5. குட்டி ஈனுவதற்கு முன்பு ஆட்டின் பின்பாகத்தில் மடியைச் சுற்றிலும் உள்ள முடியையும் வாலையும் வெட்டி விடுதல் நல்லது.
  6. அடுத்த குட்டி ஈனுவதற்கு 6-8 வாரங்கள் முன்பே பால் கறப்பதை நிறுத்தி விடவேண்டும்.
Goat_care&mgt
பிறந்த குட்டிகளின் பராமரிப்பு
    • குட்டி பிறந்தவுடன் பஞ்சு அல்லது பழைய துணி கொண்டு குட்டியின் வாயையும் மூக்கையும் நன்கு துடைக்கவேண்டும். குட்டி மூச்சுவிட எளிதாகுமாறு வாயைச்சுற்றயுள்ள திரவத்தை அகற்றவேண்டும்.
    • பின்னங்கால்களையும் பிடித்து தலைகீழாக இருக்குமாறு குட்டியை சில நொடிகள் பிடித்திருக்கலாம். இது மூச்சுக் குழல் பாதையை சுத்தம் செய்ய உதவும்.
    • குட்டி பிறந்த அரை மணிக்குள் தானாகவே எழுந்து தாயிடம் பால் குடிக்கவேண்டும். இல்லாவிடில் அது எழுந்து நடக்க உதவி செய்தல் வேண்டும்.
    • தாய் ஆட்டுக்குட்டியை நாக்கினால் தடவி விட அனுமதிக்கவேண்டும்.  தடவி விடுவதால் குட்டியின் மேலுள்ள உறை போன்ற திரவத்தை எடுத்து விடும்.
    • தொப்புள் கொடியின் மறு நுனியை டின்ச்சர் (அ) அயோடின் கொண்டு நனைத்தல் வேண்டும். இவ்வாறு 12 மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை செய்யவேண்டும்.
    • முதல் அரை மணி நேரத்திற்குள் குட்டியை சீம்பால் குடிக்க வைக்க வேண்டும். குட்டி தானாக குடிக்க முடியாவிட்டால் காம்பை எடுத்து வாயில் வைத்துப் பாலை பீய்ச்சி விடுதல் நலம்.
    • புதிதாகப் பிறந்த குட்டிகளைத் தனியே வைத்துப் பராமரிக்க வேண்டும்.
    • தொப்புள் கொடியை சிறிது நேரம் விட்டு நறுக்கிப் பின் உடனே அயோடின் அல்லது டிஞ்சர் போன்ற தொற்று நீக்கிகளைத் தடவி விடவேண்டும்.
    • முதல் இரண்டு மாதங்கள் குளிர் மழை எந்த ஒரு பாதிப்புமின்றி குட்டிகளைக் கவனமாகப் பாதுகாத்தல் வேண்டும்.
    • முதல் இரண்டு வாரங்களில் கொம்பு நீக்கம் செய்தல்.
    • கிடா குட்டிகள் இனச்சேர்கைக்குத் தேவையானவை போக மீதமுள்ள வற்றை காயடித்து விட டவேண்டும்.
    • சரியான தடுப்பூசிகளைத் தவறாமல் தகுந்த நேரம் போடுதல் வேண்டும்.
    • 8 வார வயதில் தாயிடமிருந்து குட்டியைப் பிரித்துத் தனியே வளர்க்கப் பழக்கவேண்டும்.
குட்டிகளைத் தனியே தரம் பிரித்து அதன் எடைக்கேற்ப சரியான தீவனமளித்தல் அவசியம் அதோடு பண்ணைப் பதிவேடுகளில் அடையாளமிட்டுக் குட்டிகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் முறையாகப் பராமரிக்கவேண்டும்.
Goat_care&mgt_2
ஆட்டுக்குட்டியை நாக்கினால் தடவி விடல்
பால் கறக்கும் போது கவனிக்க வேண்டியவை

பால் கறக்கும் பெட்டை ஆடுகளைக் கிடாக்களின் அருகே விடாமல் தனியே பராமரிக்கவேண்டும். ஒரு நாளைக்கு 2 முறை கறக்கலாம். காம்புகள் காயம் படுமாறு அழுத்தாமல் கவனமாகக் கறக்கவேண்டும். கறப்பதற்கு முன், மடி மற்றும் காம்புகளை நன்கு கழுவி உலர வைக்கவேண்டும். காம்பின் எல்லா இடங்களிலும் அழுத்தம் சீராகப் பரவுமாறு, கறக்கும் போது கைவிரல்களை நன்கு மடித்துக் கறக்கவேண்டும். பால் வருவது சிறிதளவாகக் குறையும் வரை கறக்கலாம்.
இளம் பெட்டை ஆடுகளின் பராமரிப்பு

நல்ல தரமுள்ள பசும்புல் மற்றும் அடர் தீவனங்களை சரியான சமயத்தில் அளித்து வருதல் நல்ல சினை ஆடுகளைத் தயார் செய்ய உதவும்.கலப்புச் செய்ய வேண்டிய ஆடுகளை வாரா வாரம் சரிபார்த்துப் பதிவேட்டில், குறித்துக் கொள்ளவேண்டும்.ஒவ்வொரு 18-24 நாட்களுக்கு ஒரு முறை பெட்டை ஆடு சூட்டிற்கு வரும். இந்தச்சூடானது 2-3 நாட்கள் வரை இருக்கும். சராசரி சினைக்காலம் 151+3 நாட்கள் ஆகும்.
செய்யக்கூடாதவை

வலியுடன் கூடிய வாயில் தடுப்பு மருந்து கொடுத்தல்


ஆட்டின் வாயில் ஏதேனும் காயமோ, வலியோ இருக்கும் போது தடுப்பு மருந்து அளிக்கக்கூடாது. பண்ணையில் உள்ள கால்நடைகளில் ஏதேனும் ஒன்றுக்கு வாயில் ஏதேனும் வலி இருந்தால் தடுப்பூசி (அ) தடுப்பு மருந்து அளிக்கும் போது வலி அதிகரிக்கும். எனவே இவ்வாறு வாய் பிரச்சனை உள்ள ஆடுகளைக் கவனித்து 3 வாரங்களுக்குப் பின் தடுப்பு மருந்து அளிக்கலாம்.
கால் நகங்களை வெட்டுதல்

கால் நகங்களை வெட்டும் போது நன்கு கவனித்து தேவையின்றி வளர்ந்த நகங்களை மட்டுமே நறுக்கவேண்டும். அதிகமாக வெட்டினாலும் காலில் வலி ஏற்படும். வெட்டாமல் விட்டாலும் கீழே, காலை உரசும் போது புண் (அ) ஏதேனும் கிருமித் தொற்று ஏற்படும் நோய் பரவ வாய்ப்புள்ளது.
குட்டி ஈனும் போது பிரச்சனை

சினை ஆடுகளைத் தனியே வைத்துப் பராமரிக்க வேண்டும். அதன் குட்டி ஈனும் காலத்தை தோராயமாகக் கணித்து அதற்கேற்றவாறு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். பொதுவாக குட்டி ஈனும் தருணத்தில் இரத்தம் விஷமாதல், கருக்கலைதல் (அ) குட்டி இறந்து பிறத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இவற்றைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் நலம்.
சினைத்தருண விஷத்தன்மை

இப்பிரச்சனை தாமதமாக கலப்புச் செய்வதால் ஏற்படுகிறது. சினையின் கடைசி மாதம் அல்லது கடைசி இரு வாரங்களில் ஏற்படலாம். பல குட்டிகள் ஈனும் ஆடுகளில் இதன் பாதிப்பு அதிகம். கடைசி இரு மாதங்களில் குட்டியின் எடை 70 சதவிகிதம் அதிகரிக்கிறது. அதற்கென குட்டிகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. ஆனால் ஆடோ அதன் வயிறு கொள்ளும் அளவு மட்டுமே தீவனம் உட்கொள்ள முடியும். குட்டிகள் தனக்குத் தேவையான ஆற்றலைத் தாயின் உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டை கரைத்து எடுத்துக் கொள்கின்றன. இதனால் ஆட்டின் உடல் இரத்தத்தில் கீடோன் கலப்பதால் அது விஷத்தன்மை அடைகிறது.
இதன் அறிகுறிகள்

பசியின்மை, எழுந்திருக்கவோ நடக்கவோ முடியாதிருத்தல், கால் வீங்குதல், மூச்சுக்காற்று நாற்றத்துடன் வெளிவருதல், மிக மெதுவாக நடத்தல் போன்றவை. இந்த நோய் தாக்கியிருப்பது தெரிந்தால் உடனே ஆட்டிற்கு ‘புரப்பைலின் கிளைக்கால்’ என்ற மருந்தை நாளொன்றுக்கு 2 முறை என்ற வீதம் வழங்கவும், அல்லது 60 சிசி அளவு எடுத்து அதில் ஆட்டைக் குளிப்பாட்டவும் அல்லது 30 சிசி சோடியம் பை கார்பனேட் மருந்தை நீருடன் கலந்து அளிக்கவும்.ஆடானது எழுந்து நடக்க முடியாதிருப்பின், உதவவேண்டும். நன்கு பராமரித்தால், வருடத்திற்கு 2 முறை குட்டிகள் ஈனும்.

0 comments :

Post a Comment